கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்க அரசாங்கத்தால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் கூலி வேலையாளர்களின் குடும்பங்களுக்கு இலவசமாக உலர் உணவுப்பொருள்களடங்கிய தலா ரூபா 1000/- (ஆயிரம்) பெறுமதியான சுமார் 250 உலர் உணவுப்பொதிகளை மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் ஊடாக வழங்க மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பு(WAIT) முன்வந்துள்ளது.

சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான இந்த அன்பளிப்பு உணவுப்பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்டசெயலகத்தில் வைத்து இன்று(30) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிவாரண பொருட்களை வெல்லாவெளி ,கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு விநியோகிக்க அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உத்தரவினை பிறப்பித்துள்ளார். இந்நிவாரணப்பொருட்கள் இப்பகுதி பிரதேச செயலாளர்களால் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அன்பளிப்புப்பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர்நலன்புரி அமைப்பின் தலைவர், கே.எம்.எம்.கலீல் JP , அங்கத்தவர் வர்த்தகர் எம்.சீ.எம்.சியாட் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் உப தலைவர் எ.எஸ்.எஸ்.வாயிஸ், பள்ளிவாயல் செயலாளர் ஏ.எல்.எம் அமீன் (நளீமி), பள்ளிவாசல் பொருளாளர் கணக்காளர் எம்.ஏ.எம்.சுஹைர் , பேஸ் இமாம் மௌலவி ஹாபிழ் நியாஸ் மற்றும் மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷனின் தலைவர் அல்ஹாஜ் ஹரீஸ் ஏ ஹலீம் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.